மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Tuesday, September 12, 2017

காவேரி ஆறும், காவேரி புஸ்கரமும்2017

காவேரி ஆறும், காவேரி புஸ்கரமும் 2017


1873ல் ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டாடிய புஷகர விழா இப்போா 2017ல் கொண்டாடபடுகிறது
இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். இதேப்போல் தீபகற்ப நதிகள் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி,காவிரி, வைகை, பீமா, தாமிரபரணி முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை.

காவேரி ஆறு
--------------------

காவேரி ஆறு என்பது தென்னிந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். கங்கை நதிக்கு அடுத்தப்படியாக புனிதமான நதியாக காவேரி கருதப்படுகிறது. காவேரி நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம்.

காவேரி ஆறு முறையே கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் சம மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்திலிருந்து தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் (ரூரல்), சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாகவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

காவிரித் தடம்
----------------------

குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் தலக்காவிரி என்ற இடத்தில் காவிரி பிறக்கிறது. காவேரி பிறந்த இடமாக கருதப்படும் தலக்காவேரி எனும் இவ்விடத்தில் தற்சமயம் ஒரு குளம் (தீர்த்தவாரி) உள்ளது. இந்த குளத்திற்கான நீரை கொண்டு வரும் சிறு பொய்கையாக காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது. இதனுடன் குடகு மாவட்டத்தில் ஹாரங்கி எனும் ஆறு காவிரியில் கலக்கிறது. பிறகு, காவிரி மைசூரு அருகே மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமணதீர்த்தம் ஆகிய இரு ஆறுகளும் காவிரியில் கலக்கின்றன. கிருஷ்ணராஜ சாகரிலிருந்து வெளிப்படும் காவிரி, ஸ்ரீரங்கப்பட்டணம் தீவைத் தோற்றுவிக்கிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. பின்பு, சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி இரண்டாகப் பிரிந்து, வலப்புறம் ககனசுக்கி அருவியாகவும், இடப்புறம் பாறசுக்கி அருவியாகவும் 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. (ககனசுக்கி அருவியில் தான் 1902-ல் ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு, கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.) இதன் பிறகு சிம்சா, அர்க்கவதி ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இதையடுத்து ஆழமான குறுகிய பாறைகளின் வழியே காவிரி தமிழ்நாட்டை அடைகிறது. இந்த இடத்திற்கு ஆடு தாண்டும் காவிரி (மேகேதாட்டு) எனப்படுகிறது. ஆடு கூட இங்கு காவிரியைத் தாண்டி விடலாம் என்பதால் இவ்விடத்திற்கு ஆடு தாண்டும் காவிரி என்று பெயர் . இவ்விடத்தை மேகேதாட்டு (Mekedatu) என்றும் அழைப்பர். இவ்விடத்திலிருந்து தமிழகத்தில் நுழையும் காவிரி, பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், புகைக் கல் என்னும் பொருளில் ஒகேனக்கல் எனப் பெயர் வந்ததாம். ஒகேனக்கலுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்து தான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து புறப்பட்டு வரும் காவிரியுடன் பவானி ஆறு இணைகிறது. அத்துடன் ஆகாய கங்கையும் வந்து கலக்கிறது என்ற ஐதீகத்தின் பேரில், பவானி கூடுதுறைக்குத் திரிவேணி சங்கமம் என்ற பெயரும் உண்டு. பவானியிலிருந்து காவிரி ஈரோட்டை அடைகிறது. ஈரோடு நகரை கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யலில் நொய்யலாறு காவிரியுடன் கலக்கிறது. கரூர் அருகேயுள்ள கட்டளையில் அமராவதி காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் காவிரி விரிந்து செல்வதால் அகண்ட காவிரி என்று பெயர் பெறுகிறது. முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டி திருச்சிக்கு சற்று முன்னர் உள்ள முக்கொம்பில் மேலணையை அடைகிறது காவிரி. அங்கு இரண்டாகப் பிரிந்து, ஒரு கிளை கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம் மற்றும் காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது.

புராண கதைகள் கூறும் காவேரி ஆற்றின் பெருமைகள்.
-------------------------------------------------------------------------------------
புராணக்கதைகளின் படி அகஸ்திய முனிவர் தன் கமண்டலத்தில் காவேரி ஆற்றை அடக்கி வைத்திருந்ததாகவும், விநாயக கடவுள் காக்கை ரூபம் கொண்டு அகஸ்திய முனிவர் தவத்தில் மூழ்கி இருந்த சமயம் அந்த கமண்டலத்தை சாய்த்து காவேரியை மலையிலிருந்து பெருக்கெடுத்து ஓட வைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு முறை காவிரி நதி பகவான் விஷ்ணுவிடம் கங்கை நதியை விட தான் புண்ணிய நதியாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். காவிரியின் கோரிக்கையைச் செவிமடுத்த விஷ்ணு, “கங்கை எனது திருவடிகளிலிருந்து பிறந்ததால், கங்கை புனிதமானது. காவிரியோ எனது மாலையாகி, எனது ஹிருதயத்திற்கு அருகில் இருப்பதால், காவிரி கங்கையைவிட புனிதமானதாகும் “ – என்று விளக்கமளித்தார். இதன் காரணமாகவே விஷ்ணுவின் மூன்று புனிதத் ஸ்தலங்கள் காவிரிக் கரையில் இருக்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டிணம், சிவனசமுத்திரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் முறையே ஆதி ரங்கா, மத்திய ரங்கா, அந்திய ரங்கா என்ற பெயர்களில் அந்த ஸ்தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒவ்வொரு இடங்களிலும் அமைந்துள்ள கோயில் காவிரி நதி சூழ்ந்து, ஒரு தீவாக அமைந்து, அதுவே புராண நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு மாலைபோல் காட்சி அளிக்கிறது. மேலும் இன்னொரு புராண வரலாறும் உண்டு. அதன் படி கங்கை தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள ஒவ்வொரு வருடமும், பூமியின் பாதாளம் வழியாக காவிரி நதிக்கு வந்து, குளித்து விட்டுப் போவதாக அந்த வரலாறு சொல்கிறது.

தன்னிடம் நீராடுபவர்களின் பாவங்களையும் அஞ்ஞானத்தையும் போக்கி சகல பாக்கியங்களையும் அளிப்பவள் காவிரி என்கிறது காவிரி புஜங்கம் என்னும் நூல்.

துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரிள மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.

காவிரி தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள் என்கிறது காவிரி புராணம். நதி தேவதைகளும், தேவர்களும், மானிடர்களும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும், அந்தக் கறைகள் அனைத்தையும் காவிரி போக்கிக் கொள்கிறாள் என்பது ஐதீகம்.
--------------------------------------------------------
காவேரி நதியில் புஷ்கர நீராடல் சிறப்பு புண்ணிய காலம்

இவ்வருடம் 2017 செப்-12 முதல் செப்-23 வரை புஷ்கர தொடக்கம். அடுத்த வருடம் 2018 செப்-30 முதல் அக்-11 வரை புஷ்கர முடிவு.

புஷ்கரம் என்றால் என்ன?

புஷ்கரர் என்பவர் படைப்புக் கடவுளான பிரம்மாவின் கமண்டலுவில் உள்ள புண்ணிய தீர்த்த அரசர். உலகில் உள்ள 3½ கோடி புண்ணிய தீர்த்த தேவதைகளுக்கு அதிபதி.

வியாழ பகவான் தேவ குரு என்று நாம் அறிவோம். அவர் ஒரு முறை பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மா என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு வியாழனோ “நவ கிரகங்களுள் எனக்கு முக்கியத்துவமுள்ள பூஜைக்குரிய நிலை கிடைக்கவேண்டும். நான் அனைத்தும் அறிந்தவனாக ஆகவேண்டும். மேலும் உமது கமண்டலுவில் உள்ள இந்த புஷ்கரர் என்னிடம் வரவேண்டும்” என்று கேட்டார். பிரம்மா அப்படியே ஆகட்டும் என்று வரம் அருளினார். ஆனால் புஷ்கர தேவன் “நான் உம்மை விட்டுச் செல்ல விரும்பவில்லை” என்று பிரம்மாவிடம் வேண்டினார்.

பிரம்மாவோ “என் வாக்கு பொய்போகாது. ஆகையால் எனது உத்தரவுபடி நீர் குறிப்பிட்ட காலமாவது வியாழனுடன் இருக்கத்தான் வேண்டும்” என்று கூறினார். ஆகாயத்தில் உள்ள 12 ராசிகளில் வியாழன் ஒவ்வொரு ராசியிலும் இருக்கும் சுமார் 1 வருட காலத்தில் ஒவ்வொரு புண்ணிய நதியுடன் அவருக்கு தொடர்பு உண்டு. ஆகவே அந்தந்த ராசியில் வியாழன் இருக்கும் பொழுது முதலில் 12 நாளும் இறுதியில் 12 நாளும் முழுவதும் புஷ்கரர் அந்தந்த நதியில் இருக்க வேண்டும் என்று பிரம்மா உத்தரவிட்டார். அதே போல் இடைப்பட்ட சுமார் 1 வருட காலத்திலும் நடுப்பகல் வேளையில் 2 முகூர்த்த நேரம் (96 நிமிடங்கள்) அந்தந்த நதியில் இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

தீபாவளியன்று அதிகாலை அனைத்து நீர்நிலைகள் மற்றும் நீரோட்டங்களிலும் கங்கை வந்து இருப்பதாக நமது ஐதீகம் உள்ளதல்லவா! இதே போல் நமது பாரத தேசத்தில் உள்ள பன்னிரண்டு பிரதான நதிகளில் அந்தந்த காலத்தில் புஷ்கர தேவன் வந்து இருக்கிறார். ஆகவே இச்சமயம் அந்தந்த நதிகளில் நீராடுவது உலகில் உள்ள 3½ கோடி புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதற்கு சமமான புண்ணியத்தை அளிக்கும், பாபங்களை விலக்கும்.

இத்தகைய நதி நீராடலுக்கு உகந்ததான மிக உன்னதமான புண்ணிய காலமே புஷ்கரம் எனப்படுகிறது.

வியாழன் எந்தெந்த ராசிகளில் இருக்கும்பொழுது எந்தெந்த நதிகளில் புஷ்கரம்?

மேஷம் - கங்கை
ரிஷபம் - நர்மதை
மிதுனம் - ஸரஸ்வதி
கடகம் - யமுனை
சிம்மம் - கோதாவரி
கன்னி - கிருஷ்ணை
துலாம் - காவேரி
விருச்சிகம் - தாமிரபரணி
தனுசு - சிந்து
மகரம் - துங்கபத்ரை
கும்பம் - பீமா
மீனம் - பிரணீதா

நமது காவேரியில் புஷ்கரம்

நமது தமிழ்நாட்டில் வருடாவருடமும் துலா ராசியில் சூரியன் ஸஞ்சரிக்கும் ஐப்பசி மாதம் காவேரி நதி முழுதும் புண்ணிய தீர்த்த நீராடல் உண்டு என்பதை அறிவோம். மஹாமகம் என்பதாக பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை வியாழன் சிம்ம ராசியில் இருக்கையில் மாசி மாதம் மக நக்ஷத்ரத்தில் ரிஷப லக்னத்தில் கும்பகோணம் மகாமகக் குளத்தில் புண்ணிய நீராடல் உண்டு என்பதும் பிரசித்தமே. இதே போல் இந்த புஷ்கர புண்ய காலத்தில் இன்ன இடத்தில் தான் என்றில்லாமல் காவேரி நதி முழுதும் புண்ணிய நீராடல் செய்து பயன்பெறுவோம்.

நிகழும் ஹேமலம்ப ௵ ஆவணி ௴ 27 ௳ (2017-செப்-12) முதல் புரட்டாசி ௴ 7 ௳ (2017-செப்-23) வரை புஷ்கர நீராடல் ஆரம்பம். இச்சமயம் காலை மதியம் மாலை என்றில்லாமல் எப்பொழுது காவேரியில் நீராடல் செய்தாலும் சிறப்பானதே. அது தொடர்ந்து ஒரு வருட காலம் புஷ்கர வருடம். இச்சமயம் நடுப்பகலில் காவேரி நீராடல் சிறப்பானது. இதன் நிறைவாக வரவிருக்கும் விலம்ப ௵ புரட்டாசி ௴ 14 ௳ (2018-செப்-30) முதல் அம்௴ 25 ௳ (2018-அக்-11) வரை புஷ்கர நீராடல் முடிவு. அச்சமயத்திலும் தொடக்கத்தில் போல் முழு நாளும் காவேரி நீராடலுக்கு சிறப்பானது.

பாபங்கள் மலிந்து புண்ணியங்கள் நலிந்திருக்கும் இக்கலிகாலத்தில் திருமூல நாயனார் -

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

என்றவாறு புஷ்கர நீராடல் போன்ற எளிமையான தர்மங்களையாவது செய்து வாழ்க்கையில் மேன்மையடைவோமாக!

No comments:

Post a Comment